Thursday, September 23, 2010

இழப்பு

பழுத்த இலை உதிர்ந்தால், உன் காலம் முடிந்தது சரி, என்று...
அனுபவ பார்வை, பார்க்க தெரிந்தது எனக்கு, ஆனால்,
உன் இழப்பை எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை.. விதி எனவா?, இல்லை இது இப்படித்தான் என பக்குவ படவா?

உதிக்கும் முன்னரே, உதிர நீ ஏன் முடிவெடுத்தாய், நான் அறியேன்....

முதலில் வலித்தது, பின்னர் வருத்தியது...இப்பொழுதும், ஒர் வெற்றிடம் என்னுள்..
உதரம், காலி பானையாய்.. நீ இல்லாத வெறும் மனையாய்..

நீ இல்லை, உன்னை பற்றிய, கனவுகளும், கற்பனையுமே எச்சமாய்..
என்னுள், உன் நினைவுகளுமே மிச்சமாய்..

இது, மறக்கும், காலம் என்ற மருந்து இந்த இழப்பிற்க்கும், களிம்பு பூசும்..
குழந்தாய்.....
உன்னை, நான் கவனியாது இருந்தெனென்றால், அன்னை என்னை மன்னித்து விடு.. மெள்ள மெள்ள இக் கசப்பை, கழித்து விடு...
உன்னொடு நான் பேசிய காலங்கள், நாம் சிரித்தோம் என எண்ணி நான் கவிதைத்த காலங்கள்... அழகானவை, அவை என்றுமே உனக்கானவை...
அழிய வேண்டாம் அவை...உன் நினவாய் இருக்கட்டும் நெஞ்சின் ஒர் மூலையில்.. உனக்கான உன் அறையில்..

70 நாட்களெனும் சரி, என்னுள் வந்தாய் உயிரே அதற்க்கு நன்றி..
அதை புரிய வைத்த நட்பிற்க்கும், அன்பிற்க்கும் நன்றி...

Tuesday, September 7, 2010

முரண்

கண்ணாடிக்குள் இரு முகம் போல் எனக்குள்ளே
சந்தோஷ கேணி வற்றாது ஊற்ற -சோக கனல் அடங்காது..வீச!
என்னதிது... ஏனிந்த முரண் என்னுள்..

என்ன வாழ்க்கை வேள்வி இது? யார் எனக்கிட்ட சாபம்... என்ன குழப்பம் என்னுள்?
யாரொடித்தார் என் சிறகை...

இன்றென்ன புதிய மாற்றம்... சிறகு மறுபடி முளைத்தது எங்கனம்?...
எப்படி மனதுள் சிரிப்பு மத்தாப்பூ பூக்கிறது...

ஒரு நாள் வெறுப்பு, மறு நாள், அன்பு...
இதென்ன நான் பைத்தியம் என்பதின் அறிகுறியா?

என் முண்டாசு கவியும், இந்த கூட்டத்தில் சேர்வானோ?
நான் ஏன் இப்படி கிடந்து அல்லாடுகிறேன்..

மாட்டிகொண்டேன் எந்த சக்கரத்தில் நான்?

தத்தக்கா புத்தக்கா என்று நடக்கும் குட்டி குழந்தை கண்டு விரியும் மனம்...
கையில் தடியும் ,துணைக்கு தனிமையுமாய்.. நடக்கும் முதியவரை காண்கையில்
சோம்பி விடுகிறது...

வாழ்க்கயே முரண்தானோ?

இப்படி போட்டு, அப்படி போட்டு, இறைவன் ஆடும் விளையாட்டுதானோ?...


இந்த தேடலும் என்னுள்ளே தொடரும் ..

மற்றபடி... உலகம் சகிக்கும்படிதான் இருக்கிறது..

நாளை மறுபடியும் வெறுத்து போகலாம்.. இருள்தான் இனி எங்கும் என்று தோன்றலாம்.

அது வரைக்கும், என்னோடு கை கோர்த்திடுங்கள்.
புன்னகை பூ விதைத்திடுங்கள் உங்களை கடந்து போகும் எல்லோருக்கும்..