Monday, December 6, 2010

குளிர்

நான் பார்த்த முதல் மழை எங்கோ யாருக்கோ,
மிக அழகான ஒன்று நிஜமாயிருக்கலாம்...

என் முதல் அழுகை, அது, கனவில், இருந்திருக்கலாம்,
தேவதை ஒருத்தி, அதை துடைத்து தட்டி கொடுத்திருக்கலாம்....

நான் என் முதல் புன்னகை சிந்திய கணம்,
சின்னதாய் ஒர் நட்சத்திரம் உதிர்ந்து, உருண்டிருக்கலாம்...

நான் தளிர் நடை நடந்து நிமிர்ந்த கணம்,
என் தாய் , உடல் சிலிர்த்து என்னை நெருங்கி அணைத்திருக்கலாம் ஆனந்தத்தில்..

அதேதும் அறியேன் நான் இன்று.....

இனி என் கண் வழி குளிர்.....

கடவுள்,
பூமியை குனிந்து முத்தமிடுகிறார்..
பனிப்பூ உதிர்கிறது..

அவர் கை உயர்த்தி...நம்மை ஆசிர்வதிக்கிறார்..
இலை உதிர்ந்து, நிலம் நிறைக்கிறது...

நட்சத்திரங்களுக்கேயான இரவு கொடுத்து.. தான் மகிழ்கிறார்..
மனிதன் கோபித்த குழந்தையாய் கூட்டுக்குள் முடங்குகிறான் தனியே...

காற்று, கடவுளுடன் ஓடிப் பிடித்து விளையாடுறது..
நாம் காதை பொத்தி நடக்கிறோம்..
மரம் நம்மை கண்டு நகையாடும், சிரிப்புதான் இலைகளின் சல சல..

கட்வுள் மனிதனுடன் பேசும் மொழி, வரமென்றால்,
மற்ற படைப்புகளுடன் பேசும் மொழி குளிர்

Thursday, September 23, 2010

இழப்பு

பழுத்த இலை உதிர்ந்தால், உன் காலம் முடிந்தது சரி, என்று...
அனுபவ பார்வை, பார்க்க தெரிந்தது எனக்கு, ஆனால்,
உன் இழப்பை எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை.. விதி எனவா?, இல்லை இது இப்படித்தான் என பக்குவ படவா?

உதிக்கும் முன்னரே, உதிர நீ ஏன் முடிவெடுத்தாய், நான் அறியேன்....

முதலில் வலித்தது, பின்னர் வருத்தியது...இப்பொழுதும், ஒர் வெற்றிடம் என்னுள்..
உதரம், காலி பானையாய்.. நீ இல்லாத வெறும் மனையாய்..

நீ இல்லை, உன்னை பற்றிய, கனவுகளும், கற்பனையுமே எச்சமாய்..
என்னுள், உன் நினைவுகளுமே மிச்சமாய்..

இது, மறக்கும், காலம் என்ற மருந்து இந்த இழப்பிற்க்கும், களிம்பு பூசும்..
குழந்தாய்.....
உன்னை, நான் கவனியாது இருந்தெனென்றால், அன்னை என்னை மன்னித்து விடு.. மெள்ள மெள்ள இக் கசப்பை, கழித்து விடு...
உன்னொடு நான் பேசிய காலங்கள், நாம் சிரித்தோம் என எண்ணி நான் கவிதைத்த காலங்கள்... அழகானவை, அவை என்றுமே உனக்கானவை...
அழிய வேண்டாம் அவை...உன் நினவாய் இருக்கட்டும் நெஞ்சின் ஒர் மூலையில்.. உனக்கான உன் அறையில்..

70 நாட்களெனும் சரி, என்னுள் வந்தாய் உயிரே அதற்க்கு நன்றி..
அதை புரிய வைத்த நட்பிற்க்கும், அன்பிற்க்கும் நன்றி...

Tuesday, September 7, 2010

முரண்

கண்ணாடிக்குள் இரு முகம் போல் எனக்குள்ளே
சந்தோஷ கேணி வற்றாது ஊற்ற -சோக கனல் அடங்காது..வீச!
என்னதிது... ஏனிந்த முரண் என்னுள்..

என்ன வாழ்க்கை வேள்வி இது? யார் எனக்கிட்ட சாபம்... என்ன குழப்பம் என்னுள்?
யாரொடித்தார் என் சிறகை...

இன்றென்ன புதிய மாற்றம்... சிறகு மறுபடி முளைத்தது எங்கனம்?...
எப்படி மனதுள் சிரிப்பு மத்தாப்பூ பூக்கிறது...

ஒரு நாள் வெறுப்பு, மறு நாள், அன்பு...
இதென்ன நான் பைத்தியம் என்பதின் அறிகுறியா?

என் முண்டாசு கவியும், இந்த கூட்டத்தில் சேர்வானோ?
நான் ஏன் இப்படி கிடந்து அல்லாடுகிறேன்..

மாட்டிகொண்டேன் எந்த சக்கரத்தில் நான்?

தத்தக்கா புத்தக்கா என்று நடக்கும் குட்டி குழந்தை கண்டு விரியும் மனம்...
கையில் தடியும் ,துணைக்கு தனிமையுமாய்.. நடக்கும் முதியவரை காண்கையில்
சோம்பி விடுகிறது...

வாழ்க்கயே முரண்தானோ?

இப்படி போட்டு, அப்படி போட்டு, இறைவன் ஆடும் விளையாட்டுதானோ?...


இந்த தேடலும் என்னுள்ளே தொடரும் ..

மற்றபடி... உலகம் சகிக்கும்படிதான் இருக்கிறது..

நாளை மறுபடியும் வெறுத்து போகலாம்.. இருள்தான் இனி எங்கும் என்று தோன்றலாம்.

அது வரைக்கும், என்னோடு கை கோர்த்திடுங்கள்.
புன்னகை பூ விதைத்திடுங்கள் உங்களை கடந்து போகும் எல்லோருக்கும்..

Friday, July 30, 2010

சந்தோஷ சாரல்


சந்தோஷ சாரல்,
என்னை தழுவ அனுமதி கேட்டு, தொட்டு தொட்டு நின்றது...

காதை கிழிக்கும் வாகனங்கள், என்னை, கண்டதும் அமைதி காத்தன..
சிடுசிடுக்கும் conductor, சிரித்தப்படி ticket கிழித்தான்..

பூக்கார கிழவி முழம் பொய் சொல்லாமல் கையில் குடுத்தாள்..
கோவிலில், கூட்டமில்லை, கடவுளுக்கும் எனக்கும் இடையில் யாருமில்லை...

உலகமே என்னை சந்தோஷமாக இரு என்று சொன்னது போல்,
நிரம்பி வழிகிறது மனது, நான், யாருக்கும் விரோதி இல்லை

அகம் மலர்ந்து இன்முகம் காட்டும் ஒவ்வொருவரும் என் நண்பர்தான்..
அட இருக்கும் அரை நாள் வாழ்க்கையில் வேதனைக்கு குத்தகை விட்டு விட்டம் பார்க்கவா நாம் பிறந்தோம்
வாரும் மக்கட்காள், நட்புடன் கை கோர்த்திடுவோம் வாழ்க்கையோடு..

அன்புடன்
L

Thursday, July 29, 2010

suvadugaL


எந்த வழிபோக்கனின் பாத சுவடுகளிது?...
யாரை காண விரைந்து சென்றிருக்கும்..
மணலில் பள்ளம் பரித்து , வீடு செல்லும் பதற்றம் தெரிகிறது இதற்க்குள்....
அல்லது, வீடு திரும்பாமல் , வாழ்க்கை விடை தேடி வீடு தாண்டியிருக்குமா இந்த பாதங்கள்..?

ஏதாயினும் சரி.. தனியாய் தவமாய் சோகம் சுமந்து சென்றிருக்கும்...
தோள் சாய, கை கோர்க்க, ஆளின்றி... தனிமை என்னும் சுமை சுமந்து... பாலைவன படுகயில் கண்ணீர் கரைத்து...
காற்றின் வழி சென்ற போக்கன் இவன் யாரோ? எது ஊரோ?

போர் முடிந்து புகலிடம் தேடும் வீரனின் ஒட்டத்தின் பதிவோ?
எந்த ஊரின் அமைதி குலைந்த்தோ?.. (அ )எந்த ஊரின் அமைதி நிலை நாட்ட இந்த பரிதவிப்போ..?

என்ன கதறுகிறது இந்த பாலைவனம்.. போகாதே என்றா? இல்லை அய்யோ அழிந்தது சாம்ராஜ்யம் என்றா?

முடிவுபெறா கடிதம் போல், கடைசி பக்கம் கிழிந்த கதை புத்தகம் போல்... இந்த சுவடுகளும் எதை சொல்ல விழைந்து
விட்டு விட்டது நம்மை யூகிக்க!!

இன்னும் ஒரு நாள்-அலுவலகத்தில்!......


இன்னும் ஒரு நாள்-அலுவலகத்தில்!......

எங்கோ என்றோ நான் யாரையோ அறிந்தும் அறியாமலும் மிதிக்க,
நீ என்னை யாரையோ விட்டு அடிக்க வைக்கிறாய்
முகம் துடிக்க, கண்ணீர் பள பளக்க , ஒன்றும் நடவாதது போல், நான் நடித்த படி...
குனிகிறேன், நிமிர்வதர்க்கு தான் என்றெண்ணிய படி...
இதுவும் கடந்து போகும், என் வேதனை மறைந்து போகும்..

குன்றில் இருக்கும் என் குமரன், நீ என் கவலை தீர்த்து இன்முகம் மீட்டு தருவாய்.

நின்னை சரண் அடைந்தேன் என்று அலறிய என் பாரதியையே விட்டு வைக்கவில்லை, நான் எம் மாத்திரம்?

ஆயினும் குமரா, அடங்கி போ என்று அடக்கியும் அடங்கா மனதின் கேள்வி...உன்னிடத்தில்...

ஏன் இப்படி? என்ன பிழை ஏன் உணர்வுகள் .. வெடித்து, அடி வயிற்றிலிருந்து, வேதனை பொங்கி...

சோர்வடைந்து, கவனம் சிதறி... துக்கம் தொண்டை அடைக்க...

என்ன பாடம் கற்றோம்?... எங்கோ சிதறி விழுந்த சந்தோஷ துளி...எப்படி மீட்போம்?

என் மோன நிலை அடைவதில்லை நான்? ஏன் பொறுமை என்னை தட்டி குடுப்பதில்லை?
நீயோ எங்கிருந்தோ புன்னகைக்கிறாய், சந்தோஷ தருணங்களொடு, இவையும் பகிர் என்னோடு!

Friday, July 23, 2010

மழை-II


மழை..
என்னை சோம்பலாக்கி தான் இடைவிடாது உழைக்கிறது.
வானம் வெளிர்ந்து நிற்ப்பது போல் நானும் நிறமிழந்து நிற்க்கிறேன்...

சந்தோஷ சாரல் ஏன் வடிந்தது என்று நான் அறியும் முன்னர்.. சோகம் அப்பி விட்டது முகத்தில்..
சட்டென்று நான் அசந்த நேரம் பார்த்து புகுந்து விட்டது வெறுமை..
வேண்டும் ஏன்றால் கூட மாட்டேன் என்றது பொறுமை

ஏன் என்று கேட்டால் நான் அறியேன்.. இதற்க்கு நான் பெண் என்ற காரணம் போதும் என்றது மனது.
எல்லாரும் அவசரமாய் எதை நோக்கியோ விரைகையில் , நான் மட்டும் சோர்ந்து...

இப்படித்தான் பல சமயம்... நான் தனித்து போகிறேன்...
காரணங்கள் அறிய விழையாமலே...

மலை மேல் தவித்து தவித்து இறங்கும் காற்று போல்...
மூச்சு முட்டும் உறவுகள்.. புரியாத உணர்வுகள்...
எதையோ எப்பொழுதும் போல் எதிர்பார்த்து..ஏமாற்றம் அடையும் மனது..

நான் கோபித்து கொள்வதற்க்கென்றே கிடைத்த அப்பாவி கணவன்...

ஏன் என்னை பெண்ணாய் படைத்தாய் இறைவா? குழந்தை மனம் குடுக்க மறந்தாய்..

வான் மேல் பறந்தாலும், விண் முகர்ந்து வந்தாலும் நான் நானாய்.. சட்டென்று, நீர் கவிழ்த்த குடுவையாய்..
கலைந்த வானமாய் ஏன் மாறுகிறேன்?

மகள்

அங்கணம் நிறைய செம்பருத்தி பூக்கள் பூத்திருக்கிறது.. உனக்கு பிடித்த நிறத்தில்....

தோய்க்கிற கல்லும், மஞ்சளரைக்கும் படியும்..
அம்மாவின் அரைத்து விட்ட சாம்பார், உருளை பொரியலோடு, முருகன் library-யில் இருந்து எடுத்து வந்த குண்டு கதை புத்த்கம் வைத்து நீ ஒடியது நினைவில் வர..
அப்பா இல்லாத நேரம் மட்டும் கிடைக்கும் இந்த ஈஸி-சேர்... என்ற உன் செல்ல சிணுங்கல்,
குனிந்து பெருக்காத கற்பகம், உன் குரல் கேட்டதும் கட்டிலடியில் கூட கூட்டும் மாயம்..

சட்டை பையில் வைக்காமல் சிகரெட்டை ஒளித்தும் உன்னிடம் மட்டும் எப்படியோ மாட்டும் தம்பி...

உன் கை வைக்கும் தயிர் சாதம் எதிர்பார்த்து , குரைத்து குரைத்து ஓய்ந்து போன தெரு நாய்...
இவை எதுவும் மாறவில்லை...

நீ மாறிவிட்டாய்.. அரை மணிக்கொரு முறை "அவர்" கதை கூறி எங்களை அலுப்படைய செய்து விட்டாய்!...

அடித்தாலும் உண்ணாத கத்திரிக்காய் அவருக்கு பிடிக்கும் அதனாலே எனக்கும் என்று அசட்டு காரணம் கூறி
அம்மாவின் அர்த்தம் மிகுந்த பார்வைக்கும், புன்னகைக்கும் ஆளானாய்..

அன்று புரிந்தது, உன்னில் மகளை தொலைத்து.. பெண்ணை மீட்டோம் என்று!

Tuesday, July 6, 2010

பருவக்கால மழை...


பருவக்கால மழை...
நகரம் நனைத்து என்னை மட்டும் குனிந்து முத்தமிட்டு சென்றது!
சிரிப்பு குமிழ்களை வெடித்து விட்டு.. குழந்தையோடு, குழந்தையாய்..
கை கோர்த்து மழை நனைந்தோம்..
நீல குடையிலிர்ந்து முத்துக்கள் சொரிய சூரியனுக்கு ஒர் பாராட்டு பத்திரம் வாசித்தது மின்னல்.
நீரி தெளித்து நீர் அடித்து விளையாடியதில் சந்தோஷம் வெளிச்சமிட்டு நின்றது முகத்தில்!

உடலும், உள்ளமும் குளிர்ந்து.. உயிர் விரிந்து இறைவன் இறங்கிய தரையாய் ஆனது மனம்.

எதோ ஒர் விடுதலை உணர்வு எல்லாரிலும் , எல்லாருடய சிரிப்பிலும்

குடை எரிந்து குடை கீழே நனைய வாருங்கள்..
முத்து உதிர்க்கும் முத்தை எடுக்க வேண்டாம்.. நெஞ்சில் வாங்கிடுவோம்..
வளர்ந்த பின்பும் விளயாடுவோம் குழந்தைகளுக்கு நிகராக ஏனெனில், குழந்தை ஆகும் நேரம் நாம் கடவுளுக்கு நெருங்கும் நேரம்!!

Thursday, July 1, 2010

ஆஸ்திரியா -அழகு நகரம்!!!


கடவுளின் காதல் நகரம், போலும் இது!
பளிங்கு தரைகள், படம் வரைந்தது போல் தோன்றும் மரக்கூட்டங்கள்...
மலைத்தொடர்கள், அதை கண்டு, மயங்கும் மனம்...

கனவுகள் என்னை கை பிடித்து அழைத்து செல்வது போல்; சிங்காரிக்க தேவையில்லாத,
சித்திரமாய் ஊர்!!!

புதிய பாதை; புதிய மொழி, பழகியிராத வானம்..
சுகமாயிருக்கிறது இந்த தனிமை...

தூரம் செல்ல செல்ல, நெருங்கி கொண்டே இருக்கிறேன், எனக்குள்ளே என்னை!

இந்த சூழலுக்கு ஏற்ற மாதிரி; கூதுகலிக்கும் மனம்!!!
பறவையென மிதக்கிறது, பிடித்து போனது எனக்கு என் ஆஸ்திரியா - பயணம்!!!

Tuesday, June 29, 2010

ராவணன்!!!Review by Lalitha!!!

ரொம்ப எதிர்பார்ப்போடு காத்திருந்து... போன படம்...
ராவன்-தமிழில் கிடைக்காமல், ஹிந்தி இருந்தாலும் பரவாயில்லை என்ற அக்காவின் பேச்சுக்கு இணங்கி.. குடும்பமாய் கலக்குவோம் என்று குழந்தை பட்டாளத்தோடு போய் இறங்கி...
Pop Corn & Coke cup-களை அவர்கள் கைககளில் திணித்து... சுகமாய் சீட்களில் settle ஆகி..


இனிமேல் Ravan-Review by Lalitha!!!

camera and clarity- இல் கலக்கபட்டிருக்கும் படம்..
படம் முழுவதும் தெரிகிற அந்த physical force is amazing,& Hats off to Rehmaan..Especially for the உசிரே போகுதே song... but other than that .. படம் கண்டிப்பாய் காத்து வாங்கும்...

ஏன் மணிரத்னம் சார் ஏன்? என்று கேக்க தோன்றுகிறது...

மணிரத்னம் அவர்கள், கதை வறட்சியி காமித்தால். இங்கே abhishek and Aishwarya இரண்டு பேருமே.. காதல்/நடிப்பு வறட்சியும் சேர்ந்து காட்டுகிறார்கள்!....

Abhishek படம் முழுக்க தொண்டை கனைக்கிறார், முழி உருட்டுகிறார் அவ்வளவே!!..அய்யோ நிஜ ராவணனே தேவலை என்று தோன்றும் அளவு...
சரி Aishwaryaவோ அதை விட மோசம்... அழகாய் இருக்கிறார், அழ்காய் பயப்படுகிறார்.. அதற்க்குமேல் அம்மணியின் Emotions zero!!!
37 வயதிலும் இவ்வளவு அழகா என்ற பெண்களுக்கே உரிய பொறாமயும் கூட வருகிறது அவ்வளவே!!!

Vikram.. இறுகிய பாறை போன்றா முக பாவம், காதலும் இல்லை, கடமையும் missing...அய்யோ முக்கியமாய் நடிப்பு? எங்கே போனார் அன்னியனில் கலக்கிய Vikram
சரி.. இதெல்லாம் இருக்கட்டும்.. என்ன கதை இதில்.. ராவணனி காதலை, சூர்ப்பனகயின் மூக்கறுப்பாய் different angle-இல்
காண்பிக்க இவ்வளவு மெனக்கெடலா என்று கேட்க தோன்றுகிறது...

என்ன கதை? ஏனிந்த கதை?... மணிரத்தினம் 5-Star hotel என்றால், அங்கு போய் தயிர் சாதமா என்று கேட்க்க தோன்றுகிறது..இதற்க்கா இத்தனை build up என்று..

Violnece-நியாயபடுத்துவது என்ன நியாயம்...? ராவணன் பார்த்து /ரசித்த மக்கள்களுக்கு , உயிர்த்தேன் by தி. ஜானகிராமன் படியுங்கள்... அங்கே தெரியும்...
ராவணனின் அழகான யாரையும் காயபடுத்தா காதல்.. அப்பொழுதும் நியாயமாய் மட்டுமே நிற்க்கும் ராமனின் ஸ்வரூபம்..

வருத்தம் என்னவென்றால், Epic-ஐ differentஆக காமிக்கறேன் என்ற பேர்வழியாய்.. சிதைக்கும் வழி...

இங்கே ராவணன் காதலிப்பது சீதாவையா? அல்லது அவளது உணர்வுகளையா?..ஒருவேளை, சீதா-Aishwarya-வாக இல்லாமல் இருந்திருந்தால் 14 மணி நேரத்தில் இறந்து போய்-கதை முடிந்து வீடு வந்திருப்போம் அவ்வளவுதான்!!!

so சீதா is looking for some one who always adores her, she is not worried about the back ground, situations .. nothing.. ஓரளவிற்க்கு இது உண்மையும்
கூட இல்லையா? எல்லா பெண்களுமே இப்படித்தான் இருக்கிறார்கள்... emotional-ஆக.. சிந்திக்க குழம்பிவிடும் நிலையில்...

சிறுபிள்ளைத்தனமாய் தோன்றலாம், but whatever it is; even if it is a movie-what is there in this for me? என்றுதான் கேக்க தோன்றுகிறது...

So, we can go fall in love with any one even if it is Ravan or Ram as long as he madly in love with you.. காடாவது, வீடாவது.. அவ்வளவுதான் இல்லையா?

Generations have changed, even if sita decided to go with Ravan, ஓ அப்படியா, என்று போய்கொண்டே இருக்கிற உலகம் சார், next time try to come out with a movie
which will leave strong impressions the way you did for கன்னத்தில் முத்தமிட்டால், அலைபாயுதே.. etc.

Disappointed with Raavan/ராவணன்!!!

Tuesday, June 22, 2010

பிறந்த நாள்!!!

என் ஜன்னல் வெளியே ஒரு தேக்கை மரம்..
என் வயதோடு ஏறும் அதன் வளயங்களும்....

வெள்ளி முளைக்கும் வயதும் அல்ல, துள்ளி குதிக்கும் வயதும் அல்ல..
என்னை நானே பிரித்து பார்த்து வியந்து நிற்க்கும் வயதிது..

சுகமாய் இருக்கிறது... இந்த வயது ஏறல்!
கொஞ்சமே கொஞ்சம் சோகமாயும்..

கிளை நிறையும் இலையாய்...நானும், நான் தாண்டி வந்த வருடங்களும்..
எனது அனுபவ்ம் ஒரு ஆல மர குடை..

எனக்கு நானே ஜன்னல்..!! ஜன்னல் உள்ளிருப்பவனும் நானே..
வெளி நின்று உள்னோக்குபவ்னும் நானே!

வாரும் நண்பர்காள்.. இன்றெனக்கு பிறந்த நாள்!!!
என்னுள் புத்தன் ஜனித்த நாள்!!

வாழ்த்தாய் வெள்ளிகீற்றாய் புன்னகை தாருங்கள்..
அன்பளிப்பாய் என் அன்பை அள்ளி செல்லுங்கள்.

Wednesday, June 16, 2010

தாயின் தவம்!!

பாலைவனத்தின் மணல் படுகையில்...படுத்து உறங்கும் காற்றாய்...
நான் காத்திருக்கிறேன்....உன் உயிர் துளி எனை தொடும் நாள் வருமென்று...

விடியதா இரவாய் நீ என்னை தொடாமல் விரைந்து ஒளிந்து விடுகிறாய்..
விளயாட்டல்ல இது,

மலையடிவார காற்றாய் நீ என்னை மறந்து மேல் நோக்கி சென்று மறைந்து விடுகிறாய்
நதியல்ல நான் எனை கடந்து, மறந்து செல்வதற்க்கு...

தரை இருந்த நாளிலிருந்து, நான் உனக்காகவே, இருந்து கொண்டு இருக்கிறென்..

உன் பிறப்பின் வார்ப்பை பதிக்க காத்திருந்தபடி...

நட்சத்திரமே... உனை உதிரத்தில் எடுத்து, உதரத்தில் சேர்த்து, உயிர் வளர்ர்ப்பது மட்டுமே என் வாழ்க்கை

என் மடி வந்த பின், கண்ணாமூச்சி விளயாடு.. வருவதர்க்கு முன்னரே வேண்டாம்...

விடை தெரியா கேள்வியாய் எனை உலக்தின் கொடியில் மாட்டி செல்லாதே.
வீழ்த்திடுவேன் என்னை, உன் உதை வாங்காத என் உயிரையும்.

கதை சொல்லி

கதை சொல்லி நான்,
ஊர் ஊராய் ஊர்ந்து சென்று, கதை விற்று கதை பெற்று வருவேன்....

ஆல மர வேராய் சில கதைகள், அடி மன ஆழத்தில் பாயும்...
சிதறி கிடக்கும் முகில்களுக்கு சிக்கெடுக்கும் தென்றலாய் சிலது...

கடலோடியும் திரவியம் தேடு என்ற மூத்தார் வாக்கிற்க்கு இணங்க...
கதை தேடி நடக்கிறேன்..

ஊர் வெளியே, விரைந்தோடும் நதி வழியே...
வெள்ளை/நீலம் என நிறம் மாறும் வான வெளியே...
என்னை நீவிர் காணலாம்...
கதைக்கலாம்... கண் பனிக்க விடை பெற்று, நெஞ்சினிலே இருத்தலாம்..

வாருங்கள், விதைத்தபடி செல்வோம்... கதைகளை,
உயிர் காற்று விற்ப்போம், அன்பு பரிமாற்றத்தில்...

நீர், நான் எல்லாம் அழிந்த பின்பும்... செல்லரிக்காத நினைவுகளாய்
நம்முடய சில கதை பதிப்புகளை...

எழுதுவதே நியாயமாய், நெருப்பாய்/நிஜமாய் வளர்ப்போம் கதைகளை...
கனவுகள் பரிமாறும்..காதல் சொல்லும், கவிதை சொல்லும் கதைகளை...

கை கோர்க்க நான் .. கதை சொல்ல நீங்கள்... இனியென்ன..
கதை சொல்லி நான்...

Friday, March 19, 2010

கனவுகள்...

கனவுகளுக்கு பாகுபாடில்லை..
அவை எல்லார் கதவையும் தட்டுகின்றன
ஒரு முறை, பல முறை,
இடைவிடாமல் எல்லா முறையும்.

அழகான பரிசாக, நம்பிக்கை என்னும் அடயாளம் விட்டு
செல்கின்றன!!

கனவை அறிந்தவர்க்கு நிஜம் ஒரு சொர்க்கம்...
அறியாதவர்க்கு... "பெட்டர் லக் நெஃஸ்ட் டைம்"!!

இரயிலோடு சினேகம்

எல்லா புகை வண்டி சந்திப்புகளிலும்..
எதோ ஓரு சினேகம் அறுந்த
அல்லது பிணைத்த கதைகளின்
தடயமிருக்கும்.

தட தடத்து இரயில் ஊர் தாண்டி
ஊர், பறந்து வர,
பரிவாய் பிறந்தகம் அழைக்கும்
தோழமை நிச்சயமிருக்கும்.

மழை கழுவிய காயங்கள்,
வெயில் சிரித்த நேரங்கள் போக,
உரையாட விஷயம் எதேனும்,
நிச்சயமிருக்கும்.

யார் கண்டார்?...
தமிழ் மொழி..போல் இரயில் மொழி
என்றேதானும் உருவாக்கப்பட்டு,

இரும்பு தோன்றா, தண்டவாளம் தோன்றா
முன்பே தோன்றியதுவாம் "இரயில் மொழி"..

என்று ஏதேனும் இரண்டு இலக்கியய்
இரயில்கள் கொடி பிடித்திருக்கும்.

வந்து போன எல்லா பயணிகளுக்கும்,
இடமளித்து, அவர்களில் ஏற்ப்படும்..
சண்டை, இடையூறை, மௌனமாய் ரசித்து,
இரைந்து பாய்ந்திருக்கும் இடை விடாமல்!

ஒரு தவமென, யாகமென
இரண்டு, தண்டவாளத்துகிடையே பிசிறாமல்
ஓடி ஓடி சேர்திருக்கும் பல ஊர்களை!

வழி பிறழ்ந்த இரயில்களின் இயலாமையை
இரவில் நிசப்தமாக ஆராய்ந்தவாறே
ஆழ்ந்திருக்கும் தன் வேலையில்...

மனிதனுக்காக மட்டுமேயன்றி..
தனக்காகவும் தடயங்கள் அது வைத்திருக்குமா
என்று கேட்டு வைக்க வேண்டும், எங்கேனும்
இரயில் மொழி கற்று ஒரு நாள்!!!

காத்திருப்பு!!!

கல்லூரி நாட்களின் மற்றுமொரு கவிதை...

குறைந்த பட்சம் ஓர் அரைப் புன்னகை
நீ வீசியிருந்தால்
வெயிலடித்த..
என் ஜன்னல் கதவு குளிர்ந்திருக்கும்...

நரைத் தெரியும் காலை வானமாய்
இரவின் அரை நிலவாய்
நீ என்னுள் உலவுகிறாய்

வீதி எதோ, நான் அறியாத
ஓர் தெருவில் மோனப் புத்தனாய்..
தாடி சொறிந்து நடந்திருப்பாய்
இப்பொழுது..

நண்பர்களுக்காக, இன்று,
வராத பஸ்ஸிற்க்காக தினமும்,

எப்பொழுதேனும் இரவில்
உனக்காகவும்,

விழித்திருந்து காத்திருக்கிறேன்...

மௌனம் பேசும் மனம்!!!(?)

கல்லூரி நாட்களில் எழுதிய என் அழகான கவிதை...


ஓயாது பேசும் மனமே...
சற்றேனும் மௌனம் பேசேன்..

குகைக்குள் கவியும் இருட்டாய்
எண்ணங்களை எழுப்பாதே..

ஏதேனும் சரி ...
கனவென்றோர் கதை கூறாதே
புறாக்கள் பட படக்கும் பம்பாய் பீச்

டெல்லியின் புராதன பாழ் கோட்டைகள்
மனித கூட்டமுடைய சந்தை காலங்கள்...
அமைதியாய் ஆனால் கங்கை..

மண்குவளையில் கிடைக்கும் சூடான இஞ்சி டீ..
மயக்கும் மஞ்சள் மாலை நேரங்கள்

காலடியில் நொறுங்கும் காய்ந்த
சருகுகள்...
வானுயர அளாவி நிற்க்கும் நீள் மரங்கள்....

அடையார் ஆயிரம் வருட ஆலமரம்
அருகே ஜி.கே தத்துவ மொழிகள்...
தொட்டு கொள்ள ஊறுகாயாய்
தி.ஜா வும், ல.ச.ர வும்..
உருளை சிப்ஸாய்.. சுஜாதாவும்.. பாலகுமாரனும்..

இது போதும் என் ஜன்ம சாபல்யம் என என்னை மயக்காதே....

ஊரடங்கிய நிசியின் நிசப்தத்தில்
தலயணையோடு தலை மட்டும் தானுறங்க
தொட்டில் விட்டிறங்கிய குழந்தையாய்.. நீ குதித்தோட,

கை கொட்டி சிரிக்கும் நட்சத்திரங்கள்....
கொஞ்சம் பொறு இன்னும் உள சில...

நித்திய மல்லியின் பந்தல் வாசம்
குளிர்ந்த தரை.. சாய்மானமாக
ஈஸிசேர்..
பௌர்ணமி நிலவு, கரும்பட்டாய் வானம்..
வெற்றிலை சிவந்து, முகம் புன்னகை பூவாக பூக்க

காதலுக்கு கட்டியம் கூற
பாங்காய் கணவன்...

கனவிலொரு நிமிடம் பாரதியாய் தான் மாறி,
டர்பனும், கருப்பு கோட்டும், முறுக்கு மீசையுமாய்
:கண்ணம்மா" என்றழைக்க...
உருகிடும் நான்...
இப்படி எதாவது இன்பக் கதை கூறாதே!!!


ஒயாது பேசும் மனமே...
சற்றேனும் மௌனம் பேசேன்!!!!

அசையா வானம் வேண்டி...

அசையா வானம் வேண்டி...
------------------------------

தனிமை திமிங்கலமாய்,
தவறுகள் செய்ய தூண்டுகிறது

தனிமை தெய்வீகமாய் அதே
தவறுகளுக்கு "சலவை கட்டி" தேடுகிறது

ஏனிப்படி இரு அவதாரம்?
எதற்க்காக இந்த தவிப்புகள்.....

தவறை சுற்றி, தேவைகளை சுற்றி
தவம் கலைந்த முனிவர் பொல்,
ஏனிப்படி ஒர் அலைச்சல்?

யாரிடம் எனக்கு என்ன கோபம்?
யாரில் என்னை தேடுகிறேன்...?

நித்தம் நித்தம் தொலைந்து போகிறேன்
யுகங்களாகி விடுகிறது என்னை மீட்க....

என் வானம் ஏன் இப்படி இடம் மாறிகொண்டே இருக்கிறது?
யாரை நான் கேள்வி கேட்டு கொண்டே இருக்கிறேன்?

எனக்குள்ளிருக்கும் "என்னையா"? இல்லை,
எங்கும் நிறைந்திருக்கும் இறைவனையா?....

யார் வேண்டும் எனக்கு?
மண் கூடு கரைந்து என் "மனிதன்" என்னை மீண்டெடுப்பானா?
எனக்கென்றோர் அசையா வானம் நிறுத்தி தருவானா?

சார்ந்து வாழ்வதென் இயல்பா?
அதற்க்கு பெயர்தான் பெண்ணா?

கரைந்து போன மணிதுளியாய்..
நான் அழிந்து கொண்டிருக்கிறேன்
கடந்த காலத்தில்...

என் நினைவுத் தகடுகளின் சுமை
கூடிகொண்டே போகிறது

சமுத்திரத்தின் முடிவில்லா அலை இயக்கம் போல்...
நான் பிறந்து கொண்டே இருக்கிறேன்,
ஒவ்வொரு யுக துவக்கத்திலும்.

என் பிறப்பின் வார்ப்பும்,
இறப்பின் நிகழ்வும்.. பூமியில் பதிந்து
கொண்டே இருக்கிறது...

பெருமூச்சிட்டப்படி, காலப் பிரம்மன்
கரை தட்டுவான், தன் "ஜனன கப்பலை" என்றேனும் ஒரு நாள்..

அந்த பொழுதில்
புரட்டி பார்ப்பேன், என்
நினைவுத் தகடுகளில், என் பதிவுகளை...

கடிதம் குழந்தைக்கு!!!

உலகமறிய ஓர் மன்னிப்பு கடிதம்
உனக்காக உயிரே....

உன் மடித்த உதட்டின் கேவல்களில்,
கிழிந்து எறியப்பட்டேன் நான்!

கால் உதைத்து எனக்காக நீ அழுது, நின்றது,
என்னுள் காலம் இழுத்த அழியா சூடு!!

ஸோஃபாவில் சுருண்டு நீ,
உறங்குகயில், உன் காய்ந்த கண்ணீர்கோடுகள்,

இடித்து காட்டும். உன்னோடு நான் விளையாடமல்
போன மாலை நேரங்களை....!

சிதறிய பூக்களாய், நீயும் உன் நண்பர்களும் பஸ்ஸிற்க்காக நிற்க்கையில்,
உன்னோடு நான் நிற்க்காத சோகம் உன் கவிழ்ந்த முகத்தில்.

மாலை வீடு திரும்பியும், மிரட்டும் அலுவலக வேலைகளில்..
நீயும் அதட்டப்படுவாய்

உஷ்..! உஷ்!! என்று உன்னை அடக்கியபடியே எடுப்பேன்
என்னுடய கான்ஃபரன்ஸ் கால்ஸ் அனைத்தயும்

உணவு ஊட்டுவதும், உறங்க வைப்பதும்.. எல்லாமே
ஒரே வார்த்தைக்குள் அடக்க படும்- டைம் ஆச்சு!!

நிலவும், நட்சத்த்திரமுமாய் கொட்டி கிடக்கும் வான வெளி...
நம்மிருவருக்குமாய் சேர்ந்து ஏமாந்து.. வெள்ளி முளைக்க
உத்தரவிட்டு செல்லும்!

உன்னிடம் உள்ள நேரமனைத்தும் எனக்காக நீ காத்திருப்பதில் கரைந்து விடுகிறது.
என் நேரமனைத்தும் உன் எதிர்காலமென்ற பெரிய கனவில் கரைந்து விடுகிறது


அழகான கனவொன்றை நேற்று உரைத்தாய் நீ!

அம்மா! நீ, தேவதை போல் இறக்கை கட்டி என்னுடனே இருந்தாய்,
பறந்தாய் மற்றும் சிரித்தாய் என்று!

சுருண்டு விட்டது என் மனசாட்சி..
உன்னை கண்டு சிரிக்காது
நான் வீணடித்த மணித்துளிகளை நினைத்து!!

உன் வலி நான் உணர்வேன்..
என் வலி நீ உணரும் நாள் வரும் வரை காத்திருப்பேன்..
அது வரை என்னை மன்னித்து என் மனச்சோர்வு களைவாய்...

கனவுகள் இலவசம்!!!

அட
கனவுகள் இலவசம் என்றார்கள் அங்கே..
எங்கே என்று என்னை கேட்க்காதே...

எங்காயினும் சரி இலவசம் என்றால் ..அங்கே
ஒரு க்யூ அமைத்து நிற்க்கும் மத்தியமரின் மத்தியில்...
நீ என்னை காணலாம்!!!

என்னை மட்டும் அன்றி, என்னை போல் பலரை...
கண்ணில் சொந்த கனவுகளின் வழியலோடு.....

இலவசத்தையும் விட்டு வைப்பானேன் என்று எண்ணும்
மக்களின் பதிப்பாய் நானும்..

நீ அவ்வரிசையில் உள்ளாய் அல்லது இல்லை நான் அறியேன்..

எப்படியோ இப்படியாயினும் கனவுகள்
மக்கள் மத்தியில் பரவினால்..
நமக்கு ஒரு சந்தோஷம்..

அட என்ன போலித்தனமான "சந்தோஷம்" இது?!
எல்லா செயல்களிற்க்கும், சிந்தனைகளுக்கும்
நியாயம் கற்ப்பிக்கும் எண்ணம் ஏன்?

இலவசமாய் இல்லாவிடிலும்..
எனக்கு வேண்டும் என் கனவுகள்...


கனவுகளின் முதுகில் ஏறி கனவு காணும்
பொழுதேனும் இவ்வுலகம் என் வசம்..

எல்லாரையும் இறைவனாய் மாற்றும் ஒரு கணம்..
நாம் கனவு காணும் நேரம் !!!


ஆம் பின்னே.. நாமே படைத்து , நாமே மறக்கலாம், அழிக்கலாம்
அல்லது ஆக்கவும் செய்யலாம்..

கடவுளின் அற்புத கனவு மானுடம் என்றால்...
ஏன் மானுடம் கனவை விஸ்த்தரிக்காது வீழ்ந்து கிடக்க வேண்டும்?

இலவச கடைகளில் தேடாது, தன்னுள் தேட வேண்டிய கனவை.. கடையில்
கேட்கும் அவலம் ஏன்?

கேட்பது என்று முதல் அவலமாயிற்று...?
கேட்பது கற்ப்பதின் முதல் படியன்றோ....

கடவுளோடு ஒரு உரையாடல்..ஊருக்காக...

என்ன எழுத நான்?

என் மோனத்திலிருந்து துயிலெழுந்தேன் இன்றுதான்...
எதோ தவமாய் நான் காணும் ...
ஒவ்வொரு நொடியும் இறைவனது என்று எண்ணி...

இன்றல்ல நாளை எனக்காக சில மணிதுளி என்று ஏமாந்து... ஒத்தி வைத்தேன் என் எழுதலை..

வாழ்க்கையின் என் பதிப்பை எழுதமால் போனேன்...
என்னை கண்டு இறைவன் சிரித்தார்...


இனி டயலாக் கன்வர்ஸேஷன் கடவுளுக்கும் எனக்கும்:

இறைவன்:

உனக்கென நீ ஒதுக்கும் துளிகளில் அல்லவோ நான் இருந்தேன்...
பொய்களில்லா பூமி சமைத்து அதில் ஆர்வம் நட்டு,

நான் நடத்த நல்ல செங்கோல் தருவாய்
என்றெல்லவோ நினத்தேன் நான்..

மனம் விரும்பும் நிஜம் மட்டும் உரைக்காமல்,
மனம் தாங்கும் உண்மைகள் வளர்ப்பாய் என்று நினைத்தால்,
பொய்களில் அமிழ்ந்து விட்டாய் நீ குழந்தாய்.. என்றார்..

நான்:


என் தேம்பலை கவனிக்காது.... நீர் சுமத்தும் குற்றம் நியாயமா?..

கடவுள்:


என்னை எல்லா மூலைகளிலும் தேடும் நீ,
எல்ல திருப்பதிலும் என் உதவி நாடும் நீ,

உன் பொய்களில் என்னை மறந்து விடுகிறாய்...
"கன்வினியன்ஸ் ஆஃப் தாட்ஸ்" என்பது இதுதானா என்றார்?

நான்:


பொய்களிலா நான் அமிழ்ந்திருக்கிறேன்.. என்ன பேத்தல் இது?...
வேலை, கடமை பொய்யாகுமா?

கடனின்றி, கபடின்றி, நான் வாழ வேலை,
அதன் உழைப்பு முக்கியமில்லையா? என்றேன்....

வேடிக்கை கலந்த வேதனையுடன் கடவுள்:


அசட்டு பெண்ணே....நீ படைக்கும் கவிதைகளிற்க்கு

கண நேரம் தருவது உனக்கு கஷ்ட்டமா என்றார்?

வேலை என்ற பெயரில் நீ பயப்பட்டு கபடத்தில் இறங்கும் நேரம்
எல்லாம் நான் உன்னை விட்டு விலகி விடுகிறேன்... நீ அது அறியாது,
என்னை தேட நான் உனக்காக தவிக்கும் தவிப்பு
நான் அல்லவோ அறிவேன்...என்றார்.

கோவமாக நான்:


அய்யா...வாழவும் சொல்கிறீர், வாழ குடுத்த உலகமோ பொல்லாதது...
கொஞ்சம் பிசகினால், மிதித்து மிழுங்கி விடும்..

நீரோ கண்ணுக்கு தெரியாத மோன லோகத்தில்,
மனசாட்சியாய் வந்து, வம்பு பேசி மறைந்து விடுவீர்...
நானல்லவோ மாட்டிருக்கிறேன் இங்கே... என்றேன்.

அன்புடன் கடவுள்:


வாயாடி பெண்ணே..வாழ வழி கேட்டாய் சொன்னேன்..
வீழ்வதற்க்கும் வழி இருக்கிறது..
மேலே எழவும் வழி இருக்கிறது...

நீ எழாமலே என்னை குறை குறினால்,
நான் வேண்டாவா வரம் கொடுக்க என்றார்..

பணிவுடன் நான்:



எனக்கு என்றுதான் புரிந்திருக்கிர்து நீங்கள் கூறும் கூற்று..
இதோ நான் வந்து விட்டேன் என் எழுத்துலகத்தில்..
இனி என்னை வழி நடத்துவீரா? என்றேன்...

இறைவன்:


எப்பொழும் போல் மாய புன்னகை கொடுத்தார் மறைந்தார்...!!!


Hope to continue the blogging ...