Monday, December 6, 2010

குளிர்

நான் பார்த்த முதல் மழை எங்கோ யாருக்கோ,
மிக அழகான ஒன்று நிஜமாயிருக்கலாம்...

என் முதல் அழுகை, அது, கனவில், இருந்திருக்கலாம்,
தேவதை ஒருத்தி, அதை துடைத்து தட்டி கொடுத்திருக்கலாம்....

நான் என் முதல் புன்னகை சிந்திய கணம்,
சின்னதாய் ஒர் நட்சத்திரம் உதிர்ந்து, உருண்டிருக்கலாம்...

நான் தளிர் நடை நடந்து நிமிர்ந்த கணம்,
என் தாய் , உடல் சிலிர்த்து என்னை நெருங்கி அணைத்திருக்கலாம் ஆனந்தத்தில்..

அதேதும் அறியேன் நான் இன்று.....

இனி என் கண் வழி குளிர்.....

கடவுள்,
பூமியை குனிந்து முத்தமிடுகிறார்..
பனிப்பூ உதிர்கிறது..

அவர் கை உயர்த்தி...நம்மை ஆசிர்வதிக்கிறார்..
இலை உதிர்ந்து, நிலம் நிறைக்கிறது...

நட்சத்திரங்களுக்கேயான இரவு கொடுத்து.. தான் மகிழ்கிறார்..
மனிதன் கோபித்த குழந்தையாய் கூட்டுக்குள் முடங்குகிறான் தனியே...

காற்று, கடவுளுடன் ஓடிப் பிடித்து விளையாடுறது..
நாம் காதை பொத்தி நடக்கிறோம்..
மரம் நம்மை கண்டு நகையாடும், சிரிப்புதான் இலைகளின் சல சல..

கட்வுள் மனிதனுடன் பேசும் மொழி, வரமென்றால்,
மற்ற படைப்புகளுடன் பேசும் மொழி குளிர்